சின்ன சின்ன பாட்டு
சில வார்த்தைகள்
சில வார்த்தைகள்
வணக்கம். எங்கள் பள்ளிக் காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக
எங்களுக்குச் 'சிறுவர் பாடல்' பயிற்சி மூன்று நாள் நடந்தது. வாசிக்கவும் எழுதவும் குழு ஒன்று உருவானது.
முதலில் பெ.தூரன், அழ.வள்ளியப்பா,
பொன்.சௌரிராஜன், கிருஷ்ணன் நம்பி, சண்முக சுப்பையா, நாரா நாச்சியப்பன், சி.குருசாமி,
குருங்குளம் முத்து ராசா ஆகியோரின் சிறுவர் பாடல்களைப் படித்தோம். தமிழ்நாடு அரசுப்
பள்ளி கல்வித்துறையின் புது ஊஞ்சல், தேன் சிட்டுச் சிறார்ப் பாடல்களையும் வாசித்தோம்.
அவர்கள் எழுதிய விஷயங்களை, எழுதிய முறைகளைக் கற்றுக் கொண்டோம். அடுத்த நாள் நாங்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து
பாடல் எழுதத் தொடங்கினோம். அவற்றை வாசித்துச்
செம்மைப்படுத்தவும் செய்தோம்.
முடிவில் ஒவ்வொருவரும் தனித்தனியாக
அமர்ந்து, சிறார் பாடல்கள் எழுதத் தொடங்கினோம்.
பிறகு பாடல்களை வாசித்தோம். செம்மைப்படுத்தினோம்.
இப்படித்தான் இப் பாடல்கள்
பிறந்தன. இப்பாடல்கள் அனைத்தும் எங்களைப் போன்று, சிறிய தவறுகள் கொண்டனவாக இருக்கலாம்.
நீங்கள் பெரியோர். சிறுவர்களாகிய எங்கள் பாடல்களின் குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும்.
இத் தொகுதியை வெளியிட காரணமாக
இருந்த எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி க.சரவணகுமாரி, காவேரி வாசிப்பு இயக்க
ஆசிரியர் ரா.தாமோதரன், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.
“உலகச் சிறார்ப் புத்தகத்
தினம்” நாளாகிய இன்று, எங்கள் சிறார்ப் பாடல் தொகுப்பை மின் - நூலாக வெளியிடுவதில்
பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக வெளிவரும் நான்காவது
மின் நூல் இது. ஏற்கெனவே, “என் கனவின் கதை“ (கதைத்தொகுதி), “16 படங்கள்” (திரை விமர்சனம்)
இரண்டு தோழிகள் (ஸ்ரீகாயத்ரி – கதைத்தொகுதி) வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள்.
எங்கள் படைப்புகளை மிக விரைவில் புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறோம். ஒவ்வொரு அரசுப்
பள்ளியிலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
இந்த நூலைச் சிறார்ப் பாடலாசிரியர்
திரு குருங்குளம் முத்து ராஜா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். நன்றி!
அன்புடன்,
உ.
முகமது ஹாருன் - ஜெ. கமலதர்ஷினி
எட்டாம்
வகுப்பு
கீழே காணும் படத்தினைச் சொடுக்கி மின் நூலைத் தரவிறக்கம்
செய்துகொள்ள வேண்டுகிறோம்
மே 23, 2024 அன்று
ஓவியர் ரூபஸ்ரீ சேகர் வெளியிட்டார்
சின்ன சின்ன பாட்டு நூலைப்பற்றி
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை வெளியிடும்
தேன்சிட்டு இதழில் கட்டுரை
(01-15, ஜுலை 2024)